Kasi Sivan Temple and meaning

October 17, 2016 Vel Uncategorized

​காசி நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..?
இதை முழுவதுமாக படியுங்கள்.
காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம். 
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை. 
சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். 
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். 
இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.
நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். 
நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 
4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். 
ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. 
இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. 
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. 
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். 
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). 
அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.
காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. 
பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. 
இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. 
முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். 
இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.
இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..? 
468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். 
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. 
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். 
அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.
இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. 
இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். 
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். 
அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. 
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. 
இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. 
இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. 
இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. 
இது ஒரு சக்தி உருவம். 
இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. 
அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். 
இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.
ஓம் நமசிவாய!


Leave a Reply

This Velmuruga.com maintaned and managed by M-Rames.